Monday, November 12, 2007

எல்லாளன்





எல்லாளன் தமிழ அரசர்

எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது.

மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். இதற்கான ஆதாரங்கள் தமிழ் நாட்டு வரலாற்றில் கிடைக்கப் பெறாததால், எல்லாளன் உத்தர தேசம் என அழைக்கப்பட்ட இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவனாக இருக்கக்கூடுமெனச் சிலர் கூறுகிறார்கள். கி.மு 205 ஆம் ஆண்டளவில் அனுராதபுரத்தைக் கைப்பற்றிய எல்லாளன் 44 ஆண்டுகள் சிறப்பானதும் நீதியானதுமான ஆட்சியை வழங்கினான். இலங்கையில் தென்பகுதியான உருகுணை உட்பட்ட முழு நாடுமே எல்லாளனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. எல்லாளன் இரு இந்துவாக இருந்தபோதிலும், பெரும்பான்மைச் சமயமாக இருந்த பௌத்த சமயத்துக்கு மிகுந்த மதிப்பு வழங்கினான் என்பது மகாவம்சம் எடுத்துக் கூறும் விடயங்களினூடாகவே அறிய முடிகிறது. வேறெந்த வகையிலும் எல்லாளன்மீது குற்றம் காண முடியாத மகாவம்சம், அவன் இந்துவாக இருந்ததால் அவன் நல்லாட்சியைக் கொடுக்க முடியாது என்ற கருத்தையும் வலியுறுத்த முயல்கிறது.


எல்லாளன் வயது முதிர்ந்த பருவத்தில் இருந்தபோது, சிங்கள இளவரசனான துட்ட காமினி, எல்லாளனுடன் தனியாகப் போர் புரிந்து அவனைத் தோற்கடித்தான்.

இந்த மன்னனைப் பற்றி இலங்கைக் கல்வி வரலாற்றுப் பாடநூல்களில் விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

எல்லாளன் சமாதி

".....( துட்ட கெமுனுவின்) இக் கட்டளைக்குப் பணிந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்கள் ஒரு வீரனாகவும், நீதியும் மனிதப் பண்பும் கொண்ட மன்னனாகவும் விளங்கிய ஒருவனுக்கு (எல்லாளனுக்கு) தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளமை இம்மக்களுக்குரிய சிறப்பைக் காட்டும்"
G. P. மலலசேகர என்ற காலஞ் சென்ற பிரபல சிங்கள பௌத்தத் தலைவரும், அறிஞரும் தனது "The Pali Literature of Ceylon" (Colombo 1928, p.34) எனும் நூலில் எல்லாளனுக்குச் சிங்கள மக்கள் செலுத்திவந்த அஞ்சலி பற்றிப் பாராட்டிக் கூறிய கூற்று.

இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1981 மார்ச் 24ல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகம், தென்னாசியவியற் கருத்தரங்கு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையாகும்.


இலங்கையில் தமிழ் இனத்துடன் தொடர்பான வரலாற்றுச் சின்னங்கள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ் மக்கள் சரியான முறையில் அறியாதிருக்கும் நிலையில், தமிழ் இனத்தைப் பல வகையாலும் தாக்கிவரும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழருடைய வரலாற்றுச் சின்னங்களை மறைத்தும், மறுத்தும், அழித்தும் வருகின்றது. இச் செயல்களுக்கு ஓர் உதாரணம்தான் 2200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த தமிழ் மன்னன் ஒருவனின் சமாதியை, எல்லாளப் பெருமன்னனின் சமாதியை, இன்று துட்டகைமுனுவின் சமாதி என்று கூறுவது.

கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எல்லாளன் சமாதியென மரபு ரீதியாகவும், வரலாற்றுச் சான்று ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த உண்மையைத் திரித்து துட்டகைமுனுவின் சமாதியெனச் சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அவ்வாறே எல்லாளன் ச்மாதி துட்டகைமுனுவின் சமாதியெனப் பெயர் மாற்றிப் பெருவிழாவும் எடுக்கப்பட்டது

மகாவம்சம் தரும் சான்று

மகாவம்சம் மேலும் கூறுவதாவது "இச்சை, வெறுப்பு, பயம், மாயை ஆகியவற்றை தவிர்த்து ஒப்பாரும் மிக்கரும் இன்றி அவன் நேர்மையாக செங்கோல் ஓச்சி வந்தான். இரவிலே முகில்கள் மழையைப் பொழிந்தன. பகலில் மழை பெய்யவே இல்லை." இச் செங்கோலனை இயற்கை கூட ஆதரித்தது போலும்.

அக்கால கட்டத்திலே வழக்கிலுருந்த ஐதீகங்களுடன் மன்னனை இணைத்து மகாவம்சம் தனது பாராட்டை விளக்கிச் செல்கிறது; "இந்த மன்னன் துன்மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்காததினால்தான் அவனுடைய நம்பிக்கைகள் பொய்யனவையாய் இருந்த போதிலும் அதிசயிக்கத்தக்க சக்திகளை அவர் வரமாகப் பெற்றிருந்தார்"

எனவே துட்டகைமுனு தான் ஈட்டிய உன்னத வெற்றி வேளையிலும்- அவன் தன் மனச் சாட்சியுடன் போராடியதைப் பின்னர் பார்ப்போம்- இதனால்தான் தனது உயர்ந்த பகைவனின் ஈமைக் கிரியைகளில் உடனடியாகப் பங்கு பற்றினான். இது வியப்பன்று.

மகாவம்சம் பின்வருமாறு கூறுகிறது; "நகரத்தின் தெற்கு வாசலில் அண்மையில் இரு மன்னர்களும் பொருதினர். எல்லாளன் குறிநோக்கி தனது ஈட்டியை எறிந்தான். துட்டகைமுனு அக் குறியில் இருந்து தப்பித்துக் கொண்டு எல்லாளனின் யானையை தந்தங்களினால் துளைப்பதற்கு தனது யானையை ஏவினான். எல்லளனை நோக்கி தனது ஈட்டியை எறிந்தான். யானையுடன் எல்லளனும் சரிந்தான். இவ்வாறு துட்டகைமுனு வெற்றிவாகை சூடி இலங்கையை ஒரே ஆட்சிக்குள் இணைத்தபின்னர் தலை நகருக்குள் தேர்ப்படையுடனும், காலாட்படையுடனும், யானைப்படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும்படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமைக் கிரியைகளை துட்டகைமுனு நடத்தினான். போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடையில் வைக்கப்பட்டு, துட்டகைமுனு அச்சிதைக்கு கொள்ளி வைத்தான். அங்கு ஒரு நினைவுத் தூபியைக் கட்டி எழுப்பி அதனை வைபடுமாறு ஆணையிட்டான். அன்று தொடக்கம் இலங்கை மன்னர்கள் இந்நினைவுத் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மௌன அஞ்சலி செய்வது வழக்கம்"

இந்த நினைவுத் தூபிக்கு அண்மையில் ஒரு தூணில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக் கல்வெட்டின் வாசகம்; "அரசனாயிருந்தால் என்ன, குடியானவனாகவிருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ. சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது" எனெக் கூறுகிறது.

ஒரு தமிழ் மன்னனுக்கு "இன்று வரையும் கூட" தனித்துவமான அஞ்சலி செலுத்தப்பட்டமைக்கு மகாவம்சத்தை இயற்றியவர், 700 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தும், (மகாவம்சம் கி. பி. 6-ம் நூற்றாண்டில்தான் இயற்றப்பட்டது) சான்று பகர்கின்றார். மகாவம்சத்தில் காணப்படும் சான்றுகளிலிருந்து நாம் பெறும் தகவல்களாவன;

இரு மன்னர்களும் நகரத்தின் "தெற்கு வாசலுக்கு (புரதக்கிண துவாரம் ஹி) அண்மையில் பொருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் எல்லாளனின் உடல் பாடையோடு எரிக்கப்பட்டது. அவ்விடத்தில்தான் துட்டகைமுனு "நினைவுத் தூபியைக்" கட்டினான். நினைவுத் தூபிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பாளிச் சொல் "Cetiya". அத்துடன் அந்நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமெனவும் ஆணையிட்டான்".


பிற ஆதாரங்கள்

மகாவம்சத்திற்கு உரையாக அமைகிறது "வம்சத்த பக்காசினி" எனும் நூலாகும். இதன் பதிப்பாசிரியர் G. P. மலலசேகர, இந்நூல் கி. பி. "8-ம் அல்லது 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது" என்கிறார். வில் கெல்ம் கைகர் என்பவர் இந்நூல் 11-ம் நூற்றாண்டிற்கும் 13-ம் நூற்றாண்டிற்கும் இடையில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதினார். இவ்விளக்க உரையின்படி மன்னர்கள் தனிச்சமர் பொருதிய இடம் (புரதக்கிண துவாரம்ஹி) "எலார பட்டிமாகரவுக்கு கிழக்கேயும் அனுராதபுரத்தின் தெற்குப் பகுதியிலும் உள்ள குயவரின் கிராமத்திற்கு மேற்கேயும்" அமைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

உரை ஆசிரியர் எலகரபட்டிமாகர எனும் இடத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது அதத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒரு இடமாகவும் எல்லொருக்கும் தெரிந்த இடமாகவும் குறிப்பிடுவது நோக்கற்பாலது. எலகரபட்டிமாகர என்றால் என்ன? "எல்லாள விக்கிரக அகம்" என்பதே அதன் பொருள். வேறு எந்த அர்த்தமும் அதற்குக் கொடுக்க முடியாது. இப்புனித இடம் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. வம்சத்தபக்காசினி இயற்றப்பட்ட காலத்திலும் அது இருந்திருக்கிறது.

கி. மு. 2-ம் நூற்றாண்டில் துட்டகைமுனுவால் பிரகடனம் செய்யப்பட்டு 6-ம் நூற்றாண்டில் அனுஷ்டிக்கப்பட்டு வந்ததாக மகாவம்சத்தின் ஆசிரியரால் சான்று பகரப்படும் வழக்கம் பற்றி உரை ஆசிரியர் சான்று பகருகிறார். இவ்வாறு செய்யும் பொழுது அவர் தனது நேரடி அனுபவத்தினையே குறிப்பிடுகின்றார் என்பது வெளிப்படை. இவ்வுரை ஆசிரியர் வாழ்ந்த காலத்திலும் இலங்கை அரசர்கள் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மாகைகளையும் வாசனைப் பொருட்களையும் தாங்கிய வண்ணம் புனித இடத்தை வலம் வந்து இவ் ஸ்தூபியை (Cetiya) வழிபட்டனர். பரணவித்தானாவும் உரையாசிரியர் வாழ்ந்த காலம் வரையிலும் அதாவது எல்லாளன் இறந்து 1000 ஆண்டிற்கு பின்னரும் எல்லாளனின் "பிரதிமை"க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.

எல்லாளன் இறந்த பின்னர் அவன் எவ்வாறு புனிதமான ஒருவனாய்க் கருதப்பட்டான் என்பதை அவனுக்கு உருவாக்கப்பட்ட சிலையும் அச்சிலைக்கு அமைக்கப்பட்ட ஒரு அகமும் வெளிக்காட்டுகின்றன. "சேத்திய" (Cetiya) என்ற சொல்லை கைகர் "நினைவுச் சின்னம்" (Monument) என மொழி பெயர்த்தமை தவறு என்பது புலனாகிறது. உண்மையில் இதற்குப் பொருத்தமான சொல் தூபி அல்லது தாதுகோபம் ஆகும்.

சமய குரவர்களாகிய மகிந்த, சங்கமித்த ஆகியோர் தகனம் செய்யப்பட்ட இடங்களிலே எழுப்பப்பட்ட கட்டிடங்களை வர்ணிக்கும்போது பயன்படுத்தப்பட்ட பாள்ச் சொற்களாகிய சேத்திய, தூப ஆகிய சொற்களை கைகர் மொழி பெயர்க்காது விட்டமை விசித்திரமானது. மகிந்தரைக் குறிப்பிடுகையில் (அவரது ஞாபகார்த்தமாக) "இங்கு ஒரு சேத்தியாவைக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது" எனவும், சங்கமித்தையைப் பற்றிக் குறிப்பிடுகையில் "மதிநுட்பம் மிக்க உதிய அங்கு ஒரு தூபியைக் கட்டுவித்தான்" எனவும் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு இடத்தில் கைகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அஃதாவது "எனது மகாவம்ச மொழிபெயர்ப்பு பற்றி நான் திருப்திப் படவேயில்லை" என்பதாகும். மாண்ட தனது பகைவனான செங்கோலனான எல்லாளனுக்குத் துட்டகைமுனு அளித்த மதிப்பும் பயபக்தியும் இத்தீவின் வரலாற்றிலேயே ஈடு இணையற்றது என்பதில் ஐயமில்லை. இறக்கும் தறுவாயில் இருந்த துட்டகைமுனுவை ஏன் மனச்சாட்சி உறுத்தியது என்பது இப்போது எமக்குப் புரிகிறது. எல்லாளன் கொல்லப்பட்ட காலத்தில் துட்டகைமுனு அவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த வணக்கத்தையும் அளித்தது எம்மால் புரந்து கொள்ள முடிகிறது. இலட்சக் கணக்கானோரை படுகொலை செய்தமை ஒன்றரை மனித்ரை படுகொலை செய்தமைக்கு ஒப்பாகும் எனப் புத்த குரமார் அவனைத் தேற்றினர். ஏனையோர் நாத்திகரும் துட்டரும் என அவர்கள் விளக்கி, அவர்களை விலங்குகளுக்கு மேலாகக் கணிக்க வேண்டியதில்லை எனவும் கூறினர்.

விதிவிலக்கானவர்களில் ஒருவர் "மூன்று நெறிகளைக் கடைப்பிடித்தவர்" என்றும் மற்றவர் " ஐந்து ஒழுக்க சீலங்களைக் கடைப்பிடிப்பதாக வாக்குப் பண்ணியவர்" என்றும் அவர்கள் விளக்கினர். இவ்வாறு விதிவிலக்கானவர்களில் ஒருவன் எல்லாளன் போலும்! E. W. அதிகாரத்தின் கருத்துப்படி எல்லாளன் பயபக்தி மிக்க இந்து சமயத்தவன். எனவே 2000 ஆண்டுகளுக்கு மேலாக எல்லாளன் வழிபடப்பட்டு வந்தமைக்குக் காரணம் அரசாணைக்குக் கீழ்ப்படிந்தமை அல்ல. ஓர் மேன்மகன் - தேசத்தவர் வழிபடும் தெய்வங்களுள் ஒருவராகக் கருதப்பட்டு - வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று கருதப்பட்டமையே.

14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சத்தர்மாலங்காரய என்னும் நூல் "எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய தாதுகோபுரத்தை துட்டகைமுனு கட்டுவித்தான்" எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

எனவே 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மகாவம்சமும் பின் வந்த உரையும் கூறும் வழக்கம் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வந்ததை இந்நூலாசிரியர் உறுதிப் படுத்துகிறார். "இற்றை வரையும் (அதாவது 14-ம் நூற்றாண்டில்) இவ்விடத்துக்கு மன்னர்கள் வரும்போது முரசு கொட்டப்படுவதில்லை" என சத்தர்மாலங்காரய கூறுகின்றது. சோழர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றிய பின்னரும் கூட இது கடைப்பிடிக்கபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே எல்லாளன் தூதுகோபுரம் போரின் அழிபடுகளையும் எஞ்சிப் பிழைத்தது எனலாம்.

போத்துக்கேயரதும் ஒல்லாந்தரதும் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டின் சில பகுதிகள் காடாக மாறிற்று. எடுத்துக் காட்டாகப் பலன்னறுவையும் அதன் சுற்றுப்புறமும் காடாக மாறி ஏறக்குறைய 500 ஆண்டுகளாக எவராலும் அறியப்படாது கிடந்ததைக் கூறலாம். ஆனால் அனுராதபுரமோ எனில் மக்களின் நினைவில் தொடர்ந்தும் இடம்பெற்று இருந்தது. அங்கு உள்ள சில நினைவுச் சின்னங்களை புனருத்தாரணம் செய்வதற்கு கீர்த்தி சிறீ இராசசிங்கன் முயன்றான் என்பதை நாம் அறிவோம்.

அனுராதபுரத்தில் காணப்படும் சில அழிபாடுகள் பொருத்தமான முறையில் இனம் காணப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் அரசர்களாயினும் சாதாரண மக்களாயினும் மரியாதையாக அஞ்சலி செலுத்திச் செல்ல வேண்டிய இடம் வாழையடி வாழையாக நன்கு தெரிந்து இருந்தது. தலைமுறை தலைமுறையாக இந்த ஆணை வாய்மொழியாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்ததினால் தவறு ஏதும் ஏற்பட்டு இருப்பதற்கு சாத்தியமில்லை எனலாம்.


வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில


19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பகைவனிடமிருந்து தப்பி ஓடிகொண்டு இருந்த பிலிமத்தலாவ அனுராதபுரத்தில் இருக்கையில் காலாதி காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த இந்த வழக்கத்தை தான் கடைப்பிடிக்க வேண்டுமென விடாப்பிடியாக வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.1840இல் வெளிவந்த "இலங்கையில் பதினொரு ஆண்டுக்ள்" என்ற நூலில் அதன் ஆசிரியரான போப்ஸ் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். "ஒரு நாத்திகனின் பாழடைந்த கல்லறையை பல பௌத்த யாத்திரீகர்கள் ஒரு புனிதக் கட்டிடத்தின் அழிபாடு எனக் கருதுகின்றனர். எல்லாளன் இறந்து 20 நூற்றாண்டுகளாகியும் எல்லாளனைத் தோற்கடித்தவனது ஆணையை எந்த ஒரு சுதேசியும் எக்கட்டத்திலும் தட்டிக் கழித்து இருப்பான் என நான் நம்பவில்லை. 1818ல் பிலிமத்தலாவ -மிகப் பழைய கண்டிய குடும்பத்தின் தலைவன்- தான் ஈடுபட்டு இருந்த கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக் கொண்டு இருந்த வேளையில் மிகக் களைப்புற்று கால் கைகள் அசைக்க முடியாது இருந்த போதிலும் தனது சிவிகையில் இருந்து கீழிறங்கினான். இடத்தினைச் சரியாகத் தெரியாததினால் இந்த பண்டைய நினைவுச் சின்னத்தை எப்போதோ கடந்தாகி விட்டது என உறுதி அளிக்கப்படும் வரை அவன் தொரர்ந்து நடந்தான்."

19ம் நூற்றாண்டு முழுவதிலும் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்ன்ரும் இந்தப் பாழடைந்த கட்டிடம் 'எலாள சொகென' என அழைக்கப்பட்டது. பண்டைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அனுராதபுரத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் இதற்கு பயபக்தியாக வணக்கம் செலுத்தி வந்தனர். எமேசன் ரெனன்ற் எழுதிய "இலங்கை" என்ற நூல் 1859-1860ம் ஆண்டு காலப்பகுதியில் 5 பதிப்பகளில் வெளிவந்தன. இந்நூலின் முதற் தொகுதியில் 3ம் பாகத்திலுள்ள 5ம் அத்தியாயம் சிங்கள வீரதர்மம் -எல்லாளனும் துட்டகெமுனுவும்- என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறது. "இரு தலைவர்களுக்குமிடையே ஏற்பட்ட போரே இலங்கை வீரதர்மத்தைப் பற்றிய ஒரே ஒரு எடுத்துக்காட்டு. எல்லாளனுடைய வீரத்தை உண்மையில் மெச்சிய அவ்னது பகைவன் எல்லாளன் மாண்ட அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினான். அதன் அழிபாடுகள் இன்றும் கூடக் காணப்படுகின்றன. இன்றும் கூட சிங்கள மக்கள் பயபக்தியோடு அதனை வழிபடுகின்றனர்"


எல்லாளனின் சமாதியே

எம்மை வழி நடத்துவதற்கு நாம் இங்கு ஒன்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். சிங்களத்தில் பிச்சுல என்பது கிம்புல் மரத்திற்கும் புளில என்பது இதனின்று வேறுபட்டு காவுடு அரச மரத்தையும் குறிக்கும் என்றும் சுட்டிக்கட்டப் பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பெயர்கள் ஒன்று தானும் கைகர் சுட்டியுள்ள "தமர்சி இண்டிகா" என்பதுடன் பொருத்தமானது அல்ல.

மகாவிகாரையின் எல்லைக்குள் தான் "கம்மாலக்க" நிச்சயமாக அமைந்துள்ளது. அரசன் தகனம் செய்யப்பட்ட பின்னர் இந்த "மாலக்க" அசுத்தம் செய்யப்பட்டதாக கருதப்பட்டு (சீமசுமுகத்தவிற்கு பின்னர்) நிசிமாலக்கவாக்கவாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கலாம். அபய ஆரியசிங்காவின் கருத்தோடு நாம் உடன்படுகின்றோம். பௌத்த மதத்தினருக்கு "பண" போதிக்க வேண்டும் என்ற அளவிற்கு பௌத்த சங்கத்துடன் இனங்காணப்பட வேண்டும் என விரும்பிய துட்டகைமுனு தான் இறந்த பின்னர் மகாவிகாரைக்கு வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என கேட்டிருத்தல் கற்பனையில் கூட செய்ய முடியாததே. அவர் "கம்மாலக்க"வையே தேர்ந்தெடுத்தார். அது பௌத்த குருமார் கட்டிடத்துள் நிச்சயமாக அமைந்திருந்தது. ஆனால் எந்தக் கட்டத்திலேயும் மகாவிகாரையின் எல்லைக்குள் தக்கிண தூபி அமையவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட வாதம் ஆதாரமற்றதாகின்றது. இப்பண்டைய இடங்கள் மாறுகின்றன என்று மன்னிப்பு கோரும் வகையில் காட்டும் வாதங்கள் திருப்திகரமானவை அன்று. ஆகவே இந்த வாதங்களை பரணவித்தானா எப்பொழுதாவது கையாளவில்லை.

பரணவித்தானா கண்டெடுத்த கல்வெட்டின்படி இத் தூபி திஸ்ஸ மகா சேத்திய என அழைக்கப்பட்டது. இலக்கிய நூல்களில் எங்கேயாவது இப்பெயரைப் பற்றி குறிப்பைக் காணோம். இதிலிருந்து தக்கிண தூபிக்கு பல பெயர்கள் இருந்திருக்கலாம் என்பதே நிரூபணமாகிறது. ஆரம்பத்தில் எலார தூபி என அழைக்கப்பட்ட இது, மகாவம்சத்தில் தக்கிண தூபி என அழைக்கப்பட்ட தூபி என்றும் வடக்கே அமைந்த அபயகிரி விகாரைக்கு மாற்றுப் பெயராக உத்தர விகாரைக்கு எதிராக உள்ள தக்கிண தூபி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விரு இடங்களும் ஒரே நெடுங்கோட்டில் அமைந்துள்ளன.

ஒன்றைப்பற்றி நாம் நிச்சயம் சொல்லலாம். எல்லாளனின் சடலம் நகரத்தின் தெற்கு வாசலில் தகனம் செய்யப்பட்டு அதன் மேல் தூபி கட்டி எழுப்பப்பட்டது. ரேணர் என்ற ஆசிரியரைப் பின்பற்றி கைகர் அவ்விடத்தை தெற்கு வாசலுக்கு அண்மையில் அமைந்தது என குறிப்பிடுகின்றார். ஆனால் இம்மொழிபெயர்ப்பு தவறானது. ஏனெனில் பாளி மூலம் "புரதக்கிண துவாரம் ஹி" (அதற்கு அர்த்தம் நகரின் தெற்கு வாசலில்) சுமங்கலாவும் பட்டுவண்துடாவையும் சிங்களத்தில் எழுதிய மகாவம்சத்தில் இது செவ்வையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அஃதாவது நகரத்தின் தெற்கு வாசலில்(நுவர தக்குணு வாசல் தொரதி)

அரசர்கள் தகனம் செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள் பற்றி இக்குழுவின் அறிக்கையை எழுதியவர் (இவ் அறிக்கை இன்னும் பரம் ரகசியமாக இருக்கிறயு) பலவாறு கூறுகின்றார். ஆனால் அவர் குறிப்பிடும் மேற்கோள்கள் இந்த வழக்கம் பரவலாக இருந்தது என்பதை ஆதரிக்கவில்லை. மேற்கோள் காட்டப்படும் ஓர் உதாரணம் எல்லளனின் தகன இடத்திற்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட தனித்துவம் வாய்ந்த சேத்தியாவுக்கே (Cetiya) பொருந்தும்.

200 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மக்களின் பெருமையின் சின்னமாக இருந்த ஒரு நினைவுச் சின்னம் இன்று அழிக்கப்படவுள்ளது என்பது தர்மிஷ்ட ஊழியின் கொடூரமான வேடிக்கையே. இந்த மண்மேட்டில் துட்டகைமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்டதாக துளிகூடச் சான்று இல்லை. இதில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சாம்பல் (இதனை மண்ணும் கரியும் அசுத்தப்படுத்தியிருக்கலாம்) மனித அஸ்தியாக இல்லாதிருக்கலாம். அதைவிட 2000 ஆண்டுகளுக்கு கீழ்ப்பட்டதாய் இருக்கலாம். அது 2000 ஆண்டு பழமையுடைய மனித அஸ்தி எனின் அது எல்லாளனுக்குரியதாய் தான் இருக்கக் கூடும். உலகம் எம்மைப் பார்த்து நகைக்காதவாறு நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்


0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro